துடியலூருக்கு மேற்கே சின்னத் தடாகத்தை அடுத்த மாங்கரையில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நசீர் வர்ஷித் (24). இவரது நண்பர் டேனியல் (24). மலுமிச்சம்பட்டியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரி மூன்றாமாண்டு கட்டடவியல் மாணவர்களான இவர்கள் இருவரும், இருசக்கர வாகனத்தில் ஆனைகட்டிக்கு சென்றுவிட்டு கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மாங்கரை அருகேயுள்ள தைலமர பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே ஆனைகட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் படுகாயமுற்ற நசீர் வர்ஷித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் டேனியல் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தடாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.