பெரியாரின் 140 -ஆவது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கும், உருவப் படத்துக்கும் பல்வேறு கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை, காந்திபுரம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திமுக மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், முன்னாள் அமைச்சர்
பொங்கலூர் பழனிசாமி, மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, அ.நந்தகுமார், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள மதிமுக மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் அக்கட்சியினர் பெரியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை புலியகுளத்தில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தின் மகளிரணி மாவட்டத் தலைவர் முத்துமணி தலைமையில் அந்த அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகரத் தலைவர் மோகன், நிர்வாகிகள் ஆடிட்டர் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.