பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயக் கலை, அறிவியல் கல்லூரியில் "தமிழில் கடைக்காப்பு' எனும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்த் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு கல்லூரிச் செயலர் சுவாமி நிர்மலேஷானந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பொன்னுசாமி வரவேற்றார்.
தமிழ்த் துறைத் தலைவர் சண்முகம் கருத்தரங்கின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.வித்யாலயக் கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் கருத்தரங்கைத் தொடக்கிவைத்து, ஆய்வுக் கோவையை வெளியிட்டார். தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்க அமர்வுகளில், பன்னிரு திருமுறைகளிலும், நாலாயிர திவ்யப் பிரபந்தங்களிலும் காணப்படும் ஓர் அமைப்பான கடைக்காப்புப்
பாடல்களின் வாயிலாக வெளிப்படும் வரலாறு, மெய்யியல், கலை, சமூகவியல், வாழ்வியல் போன்ற கருத்துக்கள் குறித்து ஆய்வறிஞர்கள் விவாதித்தனர்.
நிறைவு விழாவில் கல்லூரிச் செயலர் சுவாமி நிர்மலேஷானந்தர் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் இரா.ஆனந்த் நன்றி கூறினார்.