எஸ்டேட் பகுதிக்கு வந்த யானைகள் அங்கு அமைந்துள்ள மளிகைக் கடையை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துக் காணப்படுகிறது. இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்கு வரும் யானைகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்திவிட்டுச் செல்கின்றன.
இந்நிலையில், வால்பாறையை அடுத்த ரொட்டிக் கடை எஸ்டேட் பகுதிக்கு திங்கள்கிழமை நள்ளிரவு வந்த 3 யானைகள், அங்குள்ள சின்னப்பன் என்பவருக்குச் சொந்தமான மளிகைக் கடையை முட்டித் தள்ளின. இதில், கடையின் சுவர்கள் இடிந்து, சேதமடைந்தன. மேலும், கடையினுள் இருந்த பொருள்களையும் தின்று சேதப்படுத்திவிட்டு யானைகள் சென்றன.
இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.