கோவை மாவட்டம், சிறுமுகை வனப் பகுதியில் கண்காணிப்பு கேமராவை உடைத்த 6 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கோவை வனக் கோட்டத்துக்கு உள்பட்ட சிறுமுகை வனச் சரகத்தில் வன விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கண்காணிப்பு கேமராக்களை சிலர் உடைத்துள்ளது வனத் துறையினருக்குத் தெரிய வந்தது.
இதுகுறித்து சிறுமுகை வனச் சரக அலுவலர் மனோகரன் தலைமையில் வனத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வனப் பகுதியில் சுற்றித் திரிந்த மேட்டுப்பாளையம், கரட்டுமேட்டைச் சேர்ந்த ராஜ்குமார் (25 ), பாலப்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த மகேந்திரன் (25), வச்சினம்பாளையத்தைச் சேர்ந் மனோஜ், வெள்ளிப்பாளையம் ரங்கநாதன் ( 30) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் வேடர் காலனி பகுதியில் சந்தன மரம் மற்றும் மான் வேட்டைக்கு சென்றபோது கண்காணிப்பு கேமராவில் இருந்து வெளிச்சம் வந்ததாம். ஆகவே, வனத் துறையினரிடம் பிடிபட்டு விடுவோம் என்ற அச்சத்தில் கேமராவை உடைத்து பவானி ஆற்றில் வீசி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆளூர் வனப் பகுதியில் கண்காணிப்பு கேமராவை திருடிச் சென்றது தொடர்பாக கருப்புசாமி (55), ராஜன் (50 ) ஆகியோரைக் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து வேடர் காலனி பகுதியில் மண்ணில் புதைத்து வைத்திருந்த இரண்டு கண்காணிப்பு கேமரா, மான் வேட்டையாட பயன்படுத்திய சுருக்குக் கம்பி, அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கொண்ணி, முனியப்பன், தம்பி, செல்வராஜ், கார்த்தி, மணிகண்டன் ஆகிய 6 பேரை வனத் துறையினர் தேடி வருகின்றனர்.