வரதட்சிணை கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்திய புகாரின்பேரில் குன்னூர் கிளைச் சிறைக் காவலர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை, பாரதியார் சாலையில் உள்ள புதிய சிறைக் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் கே.பூபதி (38). இவர், நீலகிரி மாவட்டம், குன்னூர் கிளைச் சிறையில் காவலராகப் பணியாற்றி வந்தார்.
இவருக்கும், சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்த கே.சுதா (34) என்பவருக்கும் 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்தனர். இதனிடையே, நீதிமன்றத்தின் மூலமாக சமரசம் ஏற்பட்டு சில மாதங்களுக்கு முன்னர் சேர்ந்து வாழத் தொடங்கினர். இந்த நிலையில், சுதா மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அப்போது பெற்றோரிடம் இருந்து ரூ. 5 லட்சம் வரதட்சிணை வாங்கிவருமாறும், கருவைக் கலைக்குமாறும் பூபதி துன்புறுத்தினாராம். இதுகுறித்து கோவை மத்தியப் பிரிவு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுதாவின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் எதிரொலியாக அவரைக் பணியிடை நீக்கம் செய்து கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் எம்.செந்தில்குமார் புதன்கிழமை உத்தரவிட்டார்.