கீரணத்தம் ஊராட்சியில் பொது இடத்தில் குப்பை கொட்டிய லாரியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், கீரணத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட பண்ணாரியம்மன் நகர், குறிஞ்சி நகருக்கு அருகில் உள்ள ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தில் மர்ம நபர்கள் கட்டட கழிவுகள், குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை தொடர்ந்து கொட்டி வந்தனர். இதனால் அந்தப் பகுதியில் அதிக அளவில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனியாருக்கு சொந்தமான லாரியில் கட்டட கழிவுகள், குப்பைகளை கொண்டு வந்து அங்கு கொட்ட முயன்றுள்ளனர். இதுகுறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜு, ஊராட்சிச் செயலர் பாலசுந்தரம் ஆகியோருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து ஊராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தில் கழிவுகளை கொட்டியதற்காக லாரி உரிமையாளருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், அந்தப் பகுதியில் ஏற்கனவே கொட்டியுள்ள 10 டன் குப்பைகளையும் அகற்ற லாரி உரிமையாளருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.