கோவையில் குடும்பத் தகராறு காரணமாக குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு பெண் தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
கோவை, செளரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (36), லேத் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி திவ்யா (26). இவர்களது குழந்தைகள் நிகிதா (7), தேவ் (3). தனபாலுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். இதனால் திவ்யாவுக்கும், தனபாலுவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அது தொடர்பாக இருவருக்கும் இடையே திங்கள்கிழமையும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. தனபால் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த நிலையில், தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு திவ்யாவும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
முன்னதாக, தான் விஷம் அருந்திவிட்டதாகக் கணவருக்கும், உறவினர்களுக்கும் செல்லிடப்பேசி மூலமாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது மூவரும் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கிக் கிடந்துள்ளனர். இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது நிகிதா ஏற்கெனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. சிறுவன் தேவ், திவ்யா இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.