பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவை மாவட்டம், வால்பாறை உட்கோட்டம், கோட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்டது அய்யாமடைபிரிவு. இங்கு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அமைந்துள்ள பகுதி சுற்றிலும் விவசாய தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும்.
இந்நிலையில், கடையின் விற்பனையாளர் செல்வம் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையை பூட்டிச் சென்றுள்ளார். திங்கள்கிழமை மதியம் வந்து பார்த்தபோது, கடையின் சுவரைத் துளையிட்டு, உள்ளே இருந்த ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.