கோவை துடியலூரில் உள்ள பின்னலாடைத் தொழிற்சாலையில் ரூ. 1 கோடி கையாடல் செய்த கணக்காளர் மீது மாவட்டக் குற்றப் பிரிவுக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை, துடியலூரில் தனியாருக்குச் சொந்தமான பின்னலாடைத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் இருகூரைச் சேர்ந்த உதயநிதி (31) கணக்காளராகப் பணியாற்றி வந்தார். பின்னலாடை தயாரிக்க மூலப் பொருள்கள் அனுப்பும் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலமாகப் பணம் அனுப்பும் பொறுப்பையும் கவனித்து வந்தார்.
இந்நிலையில், தொழிற்சாலைக்கு சொந்தமான ரூ. 1 கோடியே 1 லட்சத்தை தனது பெயரிலும், தனது உறவினர்கள் பெயரிலும் வங்கியில் செலுத்தி கையாடல் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து, கோவை மாவட்டக் குற்றப் பிரிவு காவல் துறையில் நிறுவனத்தின் அதிகாரி சக்தி புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் உதயநிதியைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.