ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சார்பு ஆய்வாளரைத் தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக ஆரோக்கிய தனசீலன் பணியாற்றி வருகிறார். இவர் புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த, சார்பு ஆய்வாளர் ஆரோக்கிய தனசீலன் அவரிடம் விசாரித்தபோது அவர் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (25) என்பது தெரியவந்தது.
மேலும், போலீஸார் விசாரித்தபோது அங்கிருந்த அவர் தப்ப முயன்றுள்ளார். அவரை தடுக்க முயன்ற ஆரோக்கிய தனசீலனையும் விக்னேஷ் தாக்கியுள்ளார். இதையடுத்து மது போதையில் தகராறு செய்தல், அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.
இந்நிலையில், தன்னை விக்னேஷ் தாக்கியதாக அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவர் அளித்த புகாரின் பேரில் விக்னேஷ் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.