காதல் திருமணம் செய்த இளைஞரை காரில் கடத்திச் சென்று தாக்கிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், அதே பகுதியில் உள்ள பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். மணிகண்டன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டார் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வீட்டைவிட்டு வெளியேறிய மணிகண்டனும், அவரது காதலியும் கோவைக்குத் தப்பி வந்து தனது நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்துகொண்டனர். கோவையில் தங்கி ஒரு கடையில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு காரில் வந்த கும்பல் மணிகண்டனைக் கடத்திச் சென்றது. வழியில் புளியம்பட்டி அருகே கும்பலிடம் இருந்து தப்பிய மணிகண்டன் புளியம்பட்டி போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். இது குறித்து கோவை, ராமநாதபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் புளியம்பட்டி சென்று மணிகண்டனை கோவைக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில், தனது மனைவியின் சகோதரர் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் தன்னைக் கடத்திச் சென்று தாக்கியதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.