எச்ஐவி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வருவதாக அதன் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த தம்பதி கடந்த 9 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 2017 பிப்ரவரி 6 ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், பெண் குழந்தைக்கு ஜூலை மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. சில தினங்களுக்குப் பிறகு சிறுமிக்கு உடலில் சில பிரச்னைகள் ஏற்பட்டதாகக் கூறி மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்போது, சிறுமிக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். கோவை அரசு மருத்துவமனையில் இருதய பிரச்னை தொடர்பான சிகிச்சையின்போது தவறுதலாக ரத்தம் செலுத்தியுள்ளனர். இதனால் அவருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை அளித்த சம்பந்தப்பட்ட மருத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் அளித்த மனுவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறைகளில் விசாரணை நடத்தி ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தரப்பில் மாவட்ட ஆட்சியரிடம் மற்றொரு மனு அளிக்கப்பட்டது. அதில், தங்களது மகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க மறுத்து வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் இருந்து வெளியேற உள்ளோம். எனவே எங்களது மகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள கோவை அரசு மருத்துவமனை முதன்மையர் பி.அசோகன் கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில் எவ்விதக் குறைபாடும் இல்லை. மேலும், சிகிச்சை விவரங்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.