திமுக முன்னாள் எம்.பி. க.ரா.சுப்பையனின் மறைவுக்கான இரங்கல் கூட்டம் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை, காட்டூர் ராம் நகரைச் சேர்ந்தவர் க.ரா.சுப்பையன் (82). மூத்த வழக்குரைஞரான இவர் 2000-2002 ஆம் ஆண்டு வரை திமுக எம்பியாக இருந்துள்ளார். இதையடுத்து திமுக தீர்மானக் குழுச் செயலராகப் பொறுப்பு வகித்து வந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பிப்ரவரி 17 ஆம் தேதி கோவையில் இறந்தார். இவருக்கு திமுக வழக்குரைஞர்கள் சார்பில் கோவையில் இரங்கல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமை வகித்தார். பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நந்தகுமார், உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தை திமுக சட்டத் துறை இணைச் செயலர் கே.எம்.தண்டபாணி ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்தில் மறைந்த க.ரா.சுப்பையானின் மறைவுக்கு
இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திமுக வழக்குரைஞர் அணி நிர்வாகிகள் அன்புச்செழியன், ஏ.கே.ராஜேந்திரன், ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.