கோவை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை நரம்பியல் அகநாள ஆய்வுக் கூடம் திறப்பு விழா சனிக்கிழமை நடந்தது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் மூளை நரம்பியல் ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூளை நரம்புகள், கல்லீரல் மற்றும் தசைகளில் ஏற்படும் அடைப்புகளுக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கூடத்தின் திறப்பு விழா சனிக்கிழமை நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆய்வுக் கூடத்தை திறந்து வைத்து பேசியதாவது:
தமிழகத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அடுத்ததாக கோவை அரசுக் கல்லூரி மருத்துவமனையில்தான் மூளை நரம்பியல் அகநாள ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெய்கா திட்டத்தில் ரூ.275 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு செயல்படும் முடநீக்கியல் மற்றும் விபத்தியல் பிரிவில் நடைபெற்ற பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் தனி இயக்குநரகமாக வளர்ந்துள்ளது என்றார்.
முன்னதாக மூளை நரம்பியல் பிரிவு, இருதயப் பிரிவு, முடநீக்கியல் மற்றும் விபத்தியல் பிரிவுகளை அமைச்சர் ஆய்வு செய்தார். இருதயம், நரம்பியல் பகுதிகளை தூய்மையாகப் பராமரிப்பது போன்றே மற்ற பகுதிகளையும் பராமரிக்க மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்.
இதையடுத்து கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.8 கோடி மதிப்பிலான சி.டி.ஸ்கேன் கருவியும், ரூ.40 லட்சம் மதிப்பிலான நவீன சமையல் அறை கூடமும் அமைச்சரால் தொடக்கி வைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மருத்துவக் கல்வி இயக்குநர் எ.எட்வின் ஜோ மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பி.அசோகன் ஆகியோர் உடனிருந்தனர்.