கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம்' என்ற தலைப்பிலான அரசியல் எழுச்சி மாநாடு வரும் 27ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.
கொடிசியா அருகில் உள்ள மைதானத்தில் அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் மாநாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் கே.சுப்பராயன் தலைமை வகிக்கிறார். மூத்த தலைவர்கள் இரா.நல்லகண்ணு, தா.பாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வரவேற்கிறார்.
இந்த மாநாட்டில் கட்சியின் தேசிய பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி தொடக்க உரையாற்றுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றுகிறார். மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் டி.ராஜா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொஹிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், துணைச் செயலர் மு.வீரபாண்டியன், மாவட்டச் செயலர் வி.எஸ்.சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.