நாட்டின் முன்னேற்றம் பற்றிய கனவும் நமக்கு இருந்தால்தான் நம் நாடு முன்னேறும் என கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார்.
கோவை அருகே கவுண்டம்பாளையத்தில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 46 ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடந்தது. கல்லூரி செயலர் சி.ஏ.வாசுகி தலைமை வகித்தார். கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவர் தன்யா மேனன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் வே.பாலசுப்பிரமணியம் ஆண்டறிக்க சமர்பித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசியதாவது:
மனித வளம், இயற்கை வளம், 5 ஆயிரம் ஆண்டு கால கலாசார பாரம்பரிய வளம் ஆகியவை இந்தியாவில் இருந்தும் நம் நாடு பின்தங்கியிருப்பதற்குக் காரணம் என்னவென்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு ஒவ்வொரு தனி மனிதருக்கும் பல்வேறு கனவுகள் உண்டு. ஆனால் நாட்டின் முன்னேற்றம் பற்றிய கனவும் நமக்கு இருந்தால்தான் நம்நாடு முன்னேறும். நம் சமுதாய நலன்சார்ந்த விழிப்புணர்வுகளையும், பொறுப்புணர்வையும் ஏற்படுத்துகின்ற வகையில் சிறந்த கல்வியை நாம் இளைஞர்களுக்கு வழங்கவேண்டும். அதுதான் இன்றைய சரியான தேவையுமாகும் என்றார்.
விழாவில் இந்தக் கல்வியாண்டில் சிறப்பாக செயலாற்றிய துறைகளுக்கு சுழற்கேடயங்களும், கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர் பேரவையின் செயலர் ஏ.ஏ.தரணிதரன் நன்றி கூறினார்.