கோவையில் வெவ்வேறு சம்பவங்களில் முன்விரோதம் காரணமாக மூவர் கொலை செய்யப்பட்டனர்.
கோவை, கணபதி அருகேயுள்ள தங்கம்மாள் நகரைச் சேர்ந்தவர் கரிகாலன்(33). அதே பகுதியில் கஞ்சா விற்று வந்த இவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார்.
கரிகாலனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. செந்தில்குமார் தனது நண்பர்கள் சுதாகர் (32), பிரவீன்குமார் (34), கோபாலகிருஷ்ணன்(31) ஆகியோருடன் சேர்ந்து கரிகாலனைக் கொலை செய்ய திட்டமிட்டார். இந்நிலையில், சங்கனூர் சாலையில் செவ்வாய்க்கிழமை நின்று கொண்டிருந்த கரிகாலனை அங்கு காரில் வந்த செந்தில்குமாரும், அவரது நண்பர்களும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாகத் தாக்கினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமார், அவரது நண்பர்களைக் கைது செய்தனர்.
சகோதரரைக் கொன்றவர் கைது...: கோவை, தெலுங்குபாளையம் பாரதி வீதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (36). இவரது சகோதரர் சௌந்தர்ராஜனுக்கும் இவருக்கும் இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை சுந்தர்ராஜனின் வீட்டில் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, சுந்தர்ராஜன் கல்லால் சௌந்தரராஜனைத் தாக்கினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சுந்தர்ராஜன் செல்வபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இளைஞர் சடலம் மீட்பு...: கோவை லங்கா கார்னர் அருகேயுள்ள ரயில்வே தண்டாவளத்தின் அருகே ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குப் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்த இளைஞரின் கழுத்து பெல்ட்டால் இறுக்கப்பட்டிருந்தது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து உக்கடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.