கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான இரண்டே மாதங்களில் பொறியியல் பட்டதாரிப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை, கவுண்டம்பாளையம் அருகேயுள்ள கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (55). இவரது மகள் சௌந்தர்யா(23). பொறியியல் பட்டதாரியான இவருக்கு கடந்த ஆண்டு நவம்பரில் உறவினரான நவீன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக தனது தாயார் வீட்டுக்கு கணவருடன் சௌந்தர்யா வந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று டிஎஸ்பி வேல்முருகன் விசாரணை நடத்தினார். விசாரணையில், நவீன் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்ததால் தனக்கு அவரைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என திருமணத்துக்கு முன்பே சௌந்தர்யா தெரிவித்துள்ளார். பின்னற் பெற்றோர் வற்புறுத்தலின்பேரில் திருமணத்துக்குச் சம்மதித்துள்ளார். திருமணம் முடிந்த சில நாள்களில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இந்நிலையில் பொங்கல் பண்டிக்கைக்கு கணவருடன் வீட்டுக்கு வந்த சௌந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இது குறித்து தொண்டாமுத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.