கோவை மாநகராட்சி வரி வசூல் மையங்கள் வரும் மார்ச் வரையிலும் அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என்று மாநகராட்சி ஆணையரும், தனிஅலுவலருமான டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நடப்பு 2018 - 19 நிதியாண்டில் இரண்டாவது அரையாண்டு வரையிலான காலத்துக்கு மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, குடிநீர்க் கட்டணம், தொழில் வரி நிலுவைத் தொகையையும், நடப்பு ஆண்டு வரி இனங்களுக்கான தொகையையும் பொதுமக்கள் செலுத்த ஏதுவாக மாநகராட்சி வரி வசூல் மையங்கள் ஜனவரி 19ஆம் தேதி முதல் 31.3.19 வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படும்.
சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் நிலுவை வைத்துள்ளவர்களின் கட்டடங்களில் உள்ள குடிநீர் இணைப்புத் துண்டிக்கப் படுவதுடன், சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் போன்றவற்றை நிலுவையில் வைத்திருக்கும் குடியிருப்பு, வணிக வளாக உரிமையாளர்கள் உடனடியாக தொகையைச் செலுத்த வேண்டும்.
மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரி இனங்களையும் உடனடியாகச் செலுத்தி, குடிநீர் இணைப்புத் துண்டிப்பு, சட்டரீதியான நடவடிக்கைகளைத் தவிர்க்கும் வகையில் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.