மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக போலீஸ்காரர், ஊர்க் காவல் படையினர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராகப் பணியாற்றி வருபவர் செயின்ஸ்ராஜ் (38). இவர், நீலகிரியைச் சேர்ந்த ஊர்க் காவல்படை வீரர்களான ரஞ்சித்குமார், ஆனந்த், ஆன்ட்ரோ ஆகியோருடன் உக்கடம் பகுதியில் காரில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது, கார் தாறுமாறாக சென்று உக்கடத்தைச் சேர்ந்த முகமது அப்பாஸ் (20) என்பவரது மீது மோதுவது போல் சென்றுள்ளது.
இதனால் கோபமடைந்த முகமது அப்பாஸ், காரை விரட்டிச் சென்று செயின்ஸ்ராஜ் காரின் குறுக்கே நிறுத்தினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் செயின்ஸ்ராஜ் உள்ளிட்ட 4 பேர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து முகமது அப்பாஸ் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த உக்கடம் போலீஸார், காரில் இருந்த 5 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து முகமது அப்பாஸின் சகோதரர் இப்ராஹிம், உக்கடம் காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது, அவர் காவல் நிலையத்துக்கு முன்பு நின்று கொண்டிருந்த செயின்ஸ்ராஜை தாக்கியுள்ளார். இதையடுத்து, போலீஸார் அவரையும் பிடித்தனர். பின்னர் இருதரப்பினர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் 6 பேரையும் கைது செய்தனர்.