மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் தொழிலாளியின் மகன் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆவின் பாலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொன்னுசாமி. மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக உள்ளார். அங்கேயே உள்ளகுடியிருப்பில் மனைவி துளசிமணி, மகன் விக்னேஷ் (25) ஆகியோருடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில் இவரது மகன் விக்னேஷ் மசக்காளிபாளையத்தில் தனது நண்பர் ஒருவர் இறப்புக்குச் சென்றுவிட்டு வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் வீடு திரும்பினார். வீட்டின் உள்ளே சென்று கதவை தாளிட்டுக் கொண்டார்.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததைக் கண்டு கதவை உடைத்து பார்த்த போது விக்னேஷ் மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் ரேஸ்கோர்ஸ் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.