ஈரோடு, பிரப் சாலையில் ஆக்கிரமிப்பில் உள்ள 80 அடி சாலையைத் திறக்க வலியுறுத்தி, தமிழக ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் ஈ.வி.கே.சண்முகம் அளித்த மனு விவரம்: ஈரோட்டின் மையப் பகுதியான பிரப் சாலையில் அரசின் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்நிலம் வழியாகச் செல்லும் 80 அடி சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஈரோடு ரயில் நிலையம், பிரப் சாலையை இணைக்கும் இச்சாலையைத் திறக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 80 அடி சாலையை அமைக்கவும், விரிவுபடுத்தவும், ஈரோடு உள்ளூர் திட்ட குழுமத்தால் திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசிதழில் விவரத்தை வெளியிட வேண்டும். நீதிமன்றத்தைக் காரணம் கூறி பிரச்னையை தள்ளிப்போடும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காமல் இச்சாலையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
278 மனுக்கள் அளிப்பு:
ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் ஆட்சியர்அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 278 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் சி.கதிரவன், துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். இதில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஆர்.பி.பிரபாவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராமன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.