ஈரோடு ரயில் நிலைய நகரும் படிக்கட்டு பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம்:  பயணிகள் புகார்

ஈரோடு ரயில் நிலையத்தில் சுமார் ரூ. 3 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டை இயக்கி

ஈரோடு ரயில் நிலையத்தில் சுமார் ரூ. 3 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டை இயக்கி வைப்பதில் தாமதம் நீடிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் தரக்கூடிய ரயில் நிலையங்களில் சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு ரயில் நிலையம் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு அமைந்துள்ள 4 நடைமேடைகள் வாயிலாக  சேலம், கரூர், திருச்சி ரயில் தடங்களில் ஈரோடு வழியாக  தினமும் 100 க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயணித்து வருகின்றனர்.
குறிப்பாக, ஈரோடு தொழில் நகரமாக உள்ளதால் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதுதவிர, திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு ஈரோட்டில் இருந்து வேலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரயில்களில் பயணித்து வருகின்றனர். எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரயில் நிலையத்தின் நடைமேடைகளுக்கு தரைதளத்திலிருந்து படிக்கட்டுகளை மட்டுமே பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள்  நடைமேடைகளுக்குச் செல்வதில் சிரமம் நீடித்து வந்தது. இதையடுத்து, பிற ரயில் நிலையங்களைப் போல நகரும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிரொலித்தது. இதைத் தொடர்ந்து, முதியோர், மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தைக் குறைக்கும் நோக்கில் ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீட்டில் நகரும் படிக்கட்டுகள் அமைக்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக பணிகள் தொடங்கப்பட்டன. ஓராண்டில் முடிக்க வேண்டிய பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்றது. 
இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, பணிகள் மீண்டும் வேகமெடுத்தது. தற்போது இப்பணிகள் முடிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாகியும் பயணிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை.
இதுகுறித்து, முன்னாள் தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் கே.என். பாட்ஷா கூறியதாவது:
ஈரோடு ரயில் நிலையத்தில் நடை மேடைக்குச் செல்லும்  மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் படிக்கட்டுகள் வழியாக ஏறி, இறங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள மின் தூக்கியும் பயணிகள் பயன்பாட்டுக்கு விடப்படவில்லை. இதைத் தொடர்ந்து, நகரும் படிக்கட்டு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பணி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பிறகு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ஆனால்,  பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் எதற்காக காலதாமதம்  ஆகிறது என்பதை ரயில்வே நிர்வாகம் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.  பயணிகள் நலன் கருதி நகரும் படிக்கட்டை இயக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com