பவானியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மிதிவண்டி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஜே.கே.கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு, கல்வி நிறுவனங்களின் செயலாளர் என்.செந்தாமரை தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் எஸ்.ஓம் சரவணா முன்னிலை வகித்தார். பவானி காவல் துணைக் கண்காணிப்பாளர் டி.சார்லஸ், பள்ளி மாணவ, மாணவியரின் மிதிவண்டி ஊர்வலத்தைத் தொடக்கிவைத்தார்.
பவானி சங்கமேஸ்வரர் கோயில் முன்பு தொடங்கிய இந்த மிதிவண்டி ஊர்வலமானது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு முழக்கமிட்டபடி, மாணவ, மாணவியர் மிதிவண்டியில் ஊர்வலமாகச் சென்றனர்.
இதில், பவானி காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், ஜே.கே.கே. நடராஜா பள்ளி மாணவ, மாணவியர் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.