ஈரோடு, திண்டல் வேலாயுதசாமி கோயிலில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் நவம்பர் 8 ஆம் தேதி யாக சாலையில் கணபதி ஹோமத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை மாலையில் சூரசம்ஹார நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த சுமந்து வந்த பால்குடங்கள் மூலம் வேலாயுதசாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வேலாயுதசாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் கோயில் வளாகத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.