ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை அரசு வணிக வரி, பதிவுத் துறை முதன்மைச் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கா.பாலசந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சுள்ளிபாளையம், துடுப்பதி, விஜயபுரி, பெரியவீரசங்கிலி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ரூ. 59.69 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் முன்னிலையில் ஆய்வு செய்தார்.
பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், சுள்ளிபாளையம் ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 3.30 லட்சத்தில் மரம் வளர்க்கும் திட்டம், பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் ரூ. 2.10 லட்சத்தில் கொழந்தசாமி என்பவரது வீடு, தாய் திட்டத்தின்கீழ் ரூ. 20 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா, ரூ. 10 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அம்மா உடற்பயிற்சி கூடத்தையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, துடுப்பதி ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 16.75 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பெருந்துறை - மாக்கினாங்கோம்பை சாலை, சிலேட்டபுரம்-ஓசைபள்ளி சாலை வழி, பாரதிநகர் ஆகிய சாலைப் பணிகளையும், விஜயபுரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில்டி.கே.பழனிசாமி என்பவர் ரூ. 98 ஆயிரத்தில் அமைத்துள்ள பண்ணைக் குட்டை, ரூ. 26 ஆயிரம் மதிப்பிலான மழை நீர் சேகரிப்புத் தொட்டி, ரூ. 15 ஆயிரத்தில் அமைக்கப்பட்ட நீர் சேகரிப்பு அமைப்பு, மரம் நடும் திட்டத்தில் ரூ. 4 லட்சத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள், ரூ. 1.16 லட்சத்தில் அமைத்துள்ள உறிஞ்சு குழி, பொரியவீரசங்கிலி ஊராட்சியில் ரூ. 98 ஆயிரத்தில் அமைக்கப்பட்டுள்ள மண் புழு உரம் தயாரிக்கும் கொட்டகையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில், விஜயமங்கலம், விஜயபுரி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் சிகிச்சை அளிப்பது குறித்தும் விசாரித்தார்.
ஆய்வில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மு.பாலகணேசன், செயற்பொறியாளர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) எஸ்.சேகர், இணை இயக்குநர் (நலப் பணிகள்) ரமாமணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விஜயசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.