கொங்கு மண்டலத்தில் சட்ட விரோதமாக மது, லாட்டரி விற்பனை நடைபெறுவதாக மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வடக்குப் பேட்டையில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திமுக சார்பில் பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பேசியதாவது:
கொங்கு மண்டலத்தில் காவல் துறையில் லஞ்சம் பெருகியுள்ளது.
கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் தடை செய்யப்பட்ட லாட்டரி, சட்ட விரோத மது விற்பனை நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் மக்களுக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்ற தமிழக அமைச்சர்கள் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை என்றார்.