ரயில் பயணிகளிடம் சைல்டு லைன் சார்பில் விழிப்புணர்வுப் பிரசாரம்
ரயில் பயணத்தின்போது குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் வகையில் சைல்ட் லைன் சார்பில் பிரசாரம் மேற்கொண்டு துண்டறிக்கையை விநியோகித்தனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சைல்டு லைன் இண்டியா பவுண்டேஷன், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ரயில்வே அமைச்சகம், ரயில்வே சைல்டு லைன் 1098ஐ ஏற்படுத்தி சேவையாற்றி வருகிறது.
இச்சேவை குறித்து ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி(குழந்தைகள் தினம்) முதல் ஒரு வார காலத்துக்கு சைல்டு லைன் நண்பர்கள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி ரயில் நிலையங்களில் சைல்டு லைன் நண்பர்கள் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே சைல்டு லைன் அமைப்பு சார்பில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ரயில் பயணத்தின்போது குழந்தைகள் கடத்தப்படுவது, வீட்டைவிட்டு ஓடிவந்து ரயில் மூலம் வெளியூர் செல்வது, அடைக்கலம் தேடி ரயில் நிலையத்துக்குள் வருவது, ரயில் நிலையத்தில் பிச்சையெடுத்தல் உள்பட குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்க்கும் பொதுமக்கள், இதுகுறித்து சைல்டு லைன் 1098க்கு தகவல் தெரிவிக்கலாம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை பயணிகளிடம் விநியோகித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.