பவானி, சித்தோடு, அம்மாபேட்டை பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து 46 பவுன் தங்க நகைகளைத் திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.
பவானி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்தவரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் சேலம் மாவட்டம், முனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்னையன் (55) என்பதும், சித்தோடு, பவானி, அம்மாபேட்டை பகுதியில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடியதும் தெரிந்தது.
அவரால் அடமானம் வைத்திருந்த 46 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சின்னையன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறைக்காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.