அதிமுக அரசின் பல்வேறு ஊழல்களைக் கண்டித்து, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி அதிமுக அரசின் மிகப்பெரிய ஊழல்களைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அமைச்சர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள் வீடுகளில் சிபிஐ, வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையின் மூலம் ஊழல் முறைகேடுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிமுகவினரின் ஊழல்களால் பொதுமக்கள் பணம் சூறையாடப்பட்டு வருகிறது. குட்கா ஊழல் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தரம் இல்லாத சாலைகளால் மக்கள் தினமும் விபத்துகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. இதை எல்லாம் ஒழுங்குபடுத்தவும், தவறுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் சிபிஐ சோதனைகளில் சம்பந்தபட்டவர்கள் யாராக இருந்தாலும் பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றார்.
இதில், மாநில நிர்வாகிகள் சச்சிதானந்தம், முன்னாள் எம்.பி. கந்தசாமி, அந்தியூர் செல்வராஜ், சந்திரகுமார், மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணி, பழனிசாமி, குமார் முருகேஷ் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.