ஈரோட்டில் புதன்கிழமை (செப்டம்பர் 19) நடைபெறவுள்ள குறைகேட்பு முகாமில் ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் த.ராசேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் வாரியம், ஈரோடு மண்டலம் அதன் பகுதிகளுக்கு உள்பட்ட மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களைப் பெற்று உடனடியாகத் தீர்வு கிடைக்கவும், உரிய ஆலோசனை வழங்கவும், 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் ஒவ்வொரு காலண்டுக்கும் ஒரு முறை ஈரோடு மண்டல அலவலகத்தில் கூடி மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2018 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டுக்கான மின் வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (செப்டம்பர் 19) ஈ.வி.என். சாலையில் அமைந்துள்ள மின் வாரிய ஆய்வு மாளிகையில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. தனிநபர் மனுக்கள், ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கோரிக்கைகள் முற்பகலிலேயே பெற்றுக் கொள்ளப்படும்.
எனவே, ஓய்வு பெற்ற அலுவலர்கள், பணியாளர்கள் குறைகேட்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.