மேட்டூர் அணையின் மேற்குக் கரை பாசனப் பகுதிகளான பவானி, அம்மாபேட்டை கிராமப் பகுதிகளில் விவசாயிகள் நெல் நடவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர் மேற்குக் கரை வாய்க்கால் பாசனத்துக்கு கடந்த ஜூலை மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம், ஈரோடு மாவட்டத்தில் 17 ஆயிரத்து 230 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து நிரம்பியபோதிலும், வாய்க்கால் பாசனத்துக்குத் திறக்கப்பட்ட தண்ணீர் விவசாய நிலங்களுக்கு வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால், நெல் சாகுபடி செய்ய கடைமடைப் பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டாத நிலை இருந்தது.
கிணறுகளுடன் கூடிய பாசன நிலங்கள் வைத்துள்ளோர் முன்னதாகவே நாற்று விட்டதோடு, நெல் நடவுப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், வாய்க்காலைப் பராமரித்த விவசாயிகள், கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வந்து சேர்ந்ததால் நடவுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது, மழை பெய்வதால் நடவுப் பணி சிக்கலில்லாமல் நடைபெற்று வருகிறது.
பவானி, அம்மாபேட்டை பகுதிகளில் நடவுப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேட்டூர் மேற்குக் கரை பகுதியில் பிபிடி சன்ன ரகம் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
மேலும், அதிக விளைச்சல் தரும் ஏடிடி 39, வெள்ளைப் பொன்னி ஆகிய நெல் ரகங்களும் பயிரிடப்பட்டுள்ளன. வேளாண் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் நடவுப் பணிக்கு ஆள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
ஆள் தட்டுப்பாடு நிலவுவதால் பரவலாக விவசாயிகள் இயந்திரம் மூலமாக நடவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடைமடைப் பகுதிகளில் தாமதமாக நெல் விதைப்பில் ஈடுபட்டதால் விவசாயிகள் நடவுப் பணிகளைத் தொடங்காமல் உள்ளனர்.