சத்தியமங்கலத்தை அடுத்த கொண்டமுத்தனூர் பவானி ஆற்றில் குளித்த 3 பேரில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையத்தைச் சேர்ந்த சுந்தர், திருப்பதி, கார்த்தி, எபின், அலெக்ஸ் ஆகியோர் விடுமுறை நாளைக் கழிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். அதில், சுந்தர், திருப்பதி ஆகியோர் ஒரு இருசக்கர வாகனத்திலும் கார்த்தி, எபின், அலெக்ஸ் ஆகியோர் மற்றொரு இருசக்கர வாகனத்திலும் சென்றுள்ளனர். இவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்தனர்.
இதில், எபின் என்பவர் சத்தியமங்கலத்தை அடுத்த கொண்டமுத்தனூர் பவானி ஆற்றுக்கு அடிக்கடி வந்து செல்லவாரம். இதையடுத்து, எபின் தனது நண்பர்களான கார்த்தி, அலெக்ஸ் ஆகியோருடன் கொண்டமுத்தனூர் பவானி ஆற்றுக்கு வந்துள்ளார். அங்கு மூவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. மது போதையில் கார்த்தி, எபின் இருவரும் பவானி ஆற்றில் குளித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, வேகமான நீரில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.
நீண்ட நேரமாகியும் இருவரும் வராதது குறித்து நண்பர் சுந்தரனுக்கு அலெக்ஸ் தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த நண்பர்கள் அவர்களைத் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் கடத்தூர், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், மாயமான கார்த்தி, எபின் ஆகியோரின் உடல் பவானி ஆற்றில் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரின் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தேடிப் பார்த்தனர். அங்கும் கிடைக்காததால் திரும்பிச் சென்றனர். கடந்த 10 நாள்களில் பவானி ஆற்றில் குளித்த 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.