கொடுமுடி அருகே சிவகிரி காகம் கிராமத்தில் உள்ள ராவுத்தகுமாரசாமி, வீரமாத்தியம்மன் கோயிலில் சுயம்வர பார்வதி யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராவுத்தர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் முகப்பில் யாக குண்டம் அமைக்கப்பட்டு சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற்றது. பாசூர் மடாதிபதிகள் சந்திரசேகர் தீட்சிதர், விஷ்வநாத தீட்சிதர் ஆகியோரை கோயிலுக்கு அழைத்து வந்து குரு வணக்கம் செய்து, மக்கள் தங்களது குடும்பத்தினருடன் குல குரு காணிக்கை வழங்கி மடாதிபதிகளிடம் ஆசி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், பழனி ஆகிய பகுதிகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மடாதிபதிகளிடம் காணிக்கை செலுத்தி ஆசி பெற்றனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.