சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச் சுற்றுலா மீண்டும் துவக்க கோரிக்கை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செயல்பட்டு வந்த  வண்ணபூரணி வனச் சுற்றுலா திட்டத்தை கோடைக் காலமான தற்போது மீண்டும் செயல்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செயல்பட்டு வந்த  வண்ணபூரணி வனச் சுற்றுலா திட்டத்தை கோடைக் காலமான தற்போது மீண்டும் செயல்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், காட்டுப்பன்றி, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. 
வன உயிரின சரணாலயமாக இருந்த இந்த வனப் பகுதி 2013 இல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புலிகள் காப்பகத்துக்கான திட்டங்கள் ஒவ்வொன்றாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதிக்கு பயணிகளை அழைத்துச் செல்வதற்காக வண்ணபூரணி வனச் சுற்றுலா திட்டம்' 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி ஆகிய 6 வனச் சரகங்களிலும் தனித்தனியாக வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, மாலை என இருமுறை பயணிகளை அழைத்துச் சென்று வனப் பகுதியை பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. 
தாளவாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட முதியனூரிலிருந்து ஜூரகள்ளி வரை பயணிக்க ஒரு நபருக்கு ரூ. 650- ம், தலமலை வனச் சரகத்துக்குள்பட்ட திம்பத்திலிருந்து திப்புசுல்தான் கண்காணிப்பு கோபுரம் வரை பயணிக்க ரூ.500- ம், ஆசனூர் வனச் சரகம், ஆசனூரிலிருந்து ஹூலிகெரப்பட்டி வரை பயணிக்க ரூ. 650- ம், பவானிசாகர் வனச் சரகத்துக்குள்பட்ட காராச்சிக்கொரை வனச் சோனைச் சாவடியிலிருந்து தெங்குமரஹாடா வரை பயணிக்க ரூ. 650- ம், சத்தியமங்கலம் வனச் சரகம், திம்பத்திலிருந்து கோட்டாடை பிரிவு வரை பயணிக்க ரூ.650- ம், கேர்மாளத்திலிருந்து சூட்டிங் லாட்ஜ் ரோடு வரை பயணிக்க ரூ.650- ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  
இந்த வனச் சுற்றுலா செல்ல ஆன்லைனில் முன்பதிவு வசதி செய்து சுற்றுலாப் பயணிகள் நேரடியாக வனத் துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு வனச் சுற்றுலா சென்று வந்தனர். இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த 3 மாத காலமாக கடும் வறட்சி நிலவுவதால் மரங்கள், செடி,கொடிகள் காய்ந்து தீ விபத்து ஏற்பட்டதால் மார்ச் மாதம் முதல் வனச் சுற்றுலாத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 
இந்நிலையில், கடந்த சில நாள்களாக புலிகள் காப்பக வனப் பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. தற்போது பள்ளி கோடை விடுமுறைக் காலம் என்பதால் மீண்டும் வனச் சுற்றுலா தொடங்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com