மத்திய அரசின் அணுகுமுறை சரியல்ல என்று அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
டிடிவி தினகரன் பங்கேற்ற மக்கள் சந்திப்புப் பிரசாரம் சத்தியமங்கலத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது. சத்தியமங்கலத்தில் கட்சி அலுவலகத்தைத் திறந்துவைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளோம். கூட்டணி குறித்து சில கட்சிகளிடம் பேசி வருகிறோம். கூட்டணி பற்றி கமல்ஹாசன் பேசவில்லை. அதனால் நானும் பேசவில்லை.
சத்தியமங்கலம் உள்பட தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் போலி மதுபானம் விற்பனையால் காவல் துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆயிரம் கடைகளை மட்டுமே அரசு மூடியுள்ளது.
மத்திய அரசு எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். ஆனால் பிடித்தவர்களிடம் ஒரு மாதிரியும், பிடிக்காதவர்களிடம் மற்றொரு விதமாகவும் நடந்து கொள்கிறது. புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க அரசு தொடர்பான மத்திய அரசின் அணுகுமுறை சரியில்லை.
சிபிஐ தனிஅமைப்பாக இருந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதனால் சிபிஐயை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்றார்.