மொடக்குறிச்சி அருகே பெட்ரோல் பங்க்கிற்கு வந்த டெம்போவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர் மண்கரடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை இரவு 5 பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது பிஸ்கட் பாக்கெட்டுகள் ஏற்றி வந்த டெம்போ டீசல் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது, திடீரென டெம்போ முன்புறத்தில் தீப்பிடித்து புகைமூட்டம் ஏற்பட்டது. உடனே, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீ பாதுகாப்புச் சாதனம் மூலமாக தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மளமளவெனப் பரவி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இதனால், பரபரப்ப அடைந்த ஊழியர்கள் வாகனத்தை வெளியே தள்ளிக்கொண்டு ஓடினர். மீண்டும் தீப்பாதுகாப்பு சாதனங்கள் மூலமாகத் தீயை அணைத்தனர். பெட்ரோல் பங்க் எதிர்புறம் பள்ளி உள்ளது. பங்க் ஊழியர்கள் பயப்படாமல் உடனடியாக சமயோசிதமாக தீப்பற்றி எரிந்த வாகனத்தை வெளிப்பகுதிக்குக் கொண்டு சென்று தீயை அணைத்ததால் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது. இதற்காக ஊழியர்களைப் பலரும் பாராட்டினர்.