நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதை தடுக்க கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அதன் செயலர் செ.நல்லசாமி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது. நிர்வாகிகள் கதிரேசன், சிப்பிமுத்துரத்தினம், ராமசாமி, செல்லப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இலவசங்களை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் அணுகுமுறையை எந்த கட்சிகளும் செயல்படுத்தக்கூடாது. மக்கள் தொகை அதிகரிப்பதே வனவளம் அழிவதற்கு காரணமாக அமைகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த தவறினால் உலக அளவில் வனவளம், விளை நிலம் அழிந்து, உணவுப் பற்றாக்குறை, பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு ஆபத்து ஏற்படும். எனவே, மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும்.
அரசின் தவறான நீர் நிர்வாகத்தால் பவானி பாசன விவசாயிகளிடம் மோதல் உருவாகி உள்ளது. தவறான நீர் நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகம் மாற்றிக் கொள்ள வேண்டும். நிலத்தடி நீரை கண்மூடித்தனமாக உறிஞ்சி வந்தால், காலப்போக்கில் நாடு பாலைவனமாகும். எனவே அதிக ஆழமாக ஆழ்துளைக் கிணறு அமைத்தல், அதிக நீரை உறிஞ்சுதல், அதிகமாக நீர் எடுத்து விற்பனை செய்தல் போன்றவற்றுக்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்.