ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்துள்ள புன்னம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பவானி கார்பெட் சிட்டி ரோட்டரி சங்கம், விடியல் ஆரம்பம் அமைப்பு ஆகியன இணைந்து பள்ளி மாணவ, மாணவியருக்கு எளிதாக ஆங்கில உச்சரிப்பு, பேச்சுப் பயிற்சியை நடத்தின. கடந்த இரு வாரங்களாக நடைபெற்ற இப்பயிற்சியில் திருப்பூரைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் சண்முகம் மாணவ, மாணவியருக்கு பயிற்சியளித்தார்.
இதையடுத்து ஆங்கில உச்சரிப்பு, பேச்சாற்றல் பயிற்சி வகுப்பை நிறைவு செய்த 130 பேருக்கு சான்றிதழ்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு பவானி கார்பெட் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். விடியல் ஆரம்பம் அமைப்புத் தலைவர் ஆர்.பிரகாஷ், சங்கச் செயலர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியை சாரதா வரவேற்றார்.
மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, பிற மாணவர்கள் முன்பு ஆங்கிலம் பேசுவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.