சென்னிமலை அருகே, இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதியது. இதில், தந்தை உயிரிழந்தார். மகள் காயமடைந்தார்.
சென்னிமலையை அடுத்த வெள்ளோடு, நடுபாளையத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (53). நெசவுத் தொழிலாளி. இவருடைய மகள் நித்யா (17). இவர் சென்னிமலையில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
உடல்நிலை சரியில்லாத மகள் நித்யாவை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மனோகரன் ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றார். பின்னர், மாலை, 6 மணிக்கு, இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்னிமலை திரும்பினர்.வெள்ளோடு அருகே, சென்னிமலையில் இருந்து வெள்ளோடு நோக்கி வந்த ஒரு ஆட்டோ அவர்கள் மீது மோதியது. இதில், இருவரும் படுகாயமடைந்தனர். இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மனோகரன் உயிரிழந்தார். ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நித்யா சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சென்னிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.