பெருந்துறை அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் நான்கு சாலை சந்திப்பில் தேசிய வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தின் அருகே கடைகளும், வீடுகளும் உள்ளன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்த ஒருவர் இரும்புக் கம்பியால் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்.
அப்போது, சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஏ.டி.எம். மையத்துக்குச் சென்றுள்ளனர். பொதுமக்களைக் கண்டவுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.
ஆனால், பொதுமக்கள் அந்த நபரை விரட்டிப் பிடித்து காஞ்சிக்கோவில் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மான்குட்டைபாளையத்தைச் சேர்ந்த அரவிந்த்சாமி (27) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அரவிந்த்சாமியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.