பவானி அருகே உள்ள மயிலம்பாடி சிற்றூராட்சியில் ரூ.71 லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக் குழு கட்டடம் கட்டும் பணி செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை வகித்து கட்டுமானப் பணிகளைத் தொடக்கிவைத்தார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியக் குழு உறுப்பினர் கே.தட்சிணாமூர்த்தி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் என்.கிருஷ்ணராஜ், பி.குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மயிலம்பாடி வாரச் சந்தை வளாகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.71 லட்சம் நிதியில் 3,790 சதுர அடி பரப்பளவில் இக்கட்டடம் கட்டப்படுகிறது.
பவானி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.சிவசண்முகம், எஸ்.செல்வி, அதிமுக ஒன்றியச் செயலர் எஸ்.எம்.தங்கவேலு, ஊராட்சி எழுத்தர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.