கோபி கலை, அறிவியல் கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில் புதுவள்ளியம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் விரிவாக்கப் பணி, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை பற்றிய விரிவாக்க செயல்பாடுகள் ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.
இதில் பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் வீடு, வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை கல்லூரி மேலாண்மைத் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் வழங்கினர். அதில் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், சுற்றுப்புற மாசுபாடு, உடல்நலக்கேடு, மண்ணின் வளம் கெடுதல், விலங்கினங்களுக்கு ஏற்படும் உயிரிழப்பு, உணவுப் பண்டங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டில் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய், பிளாஸ்டிக்கின் மாற்றுப்பொருளான மண்பாண்டம் மற்றும் சணல் பொருள்களை உபயோகிப்பதற்குப் பழக்கப்படுத்துதல் குறித்து எடுத்துரைத்தனர்.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து சிறப்பாக பேசியவர்களுக்கு பேராசிரியர் எஸ்.பார்த்திபன் பரிசுகள் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை மேலாண்மைத் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.