சாலையோரங்களில் விளம்பரத் தட்டிகள் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் அச்சக உரிமையாளர்கள் ஆகியோர்களுக்கு, விளம்பரத் தட்டிகள் வைப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவை விளக்கும் வகையில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் சி.கதிரவன் பேசியதாவது:
சாலையோரங்களில், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் வைக்கப்படும் விளம்பரத் தட்டிகள், டிஜிட்டல் பதாகைகள் போன்றவற்றால் வாகன ஓட்டிகளின் கவனம் திசை திரும்புவதாகவும், இதனால் சாலை விபத்துகள் ஏற்படுவதோடு, பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் நடைபாதை, நடைமேடை, கிராம, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் ஆகிய இடங்களில் விளம்பரத் தட்டிகள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, இந்தத் தடை உத்தரவை அனைவரும் பின்பற்றவேண்டும். உத்தரவை மீறுபவர்கள் மீது நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.