மரவள்ளி, ஜவ்வரிசி விலை ரூ. 700 வரை அதிகரித்துள்ளதால் ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, அந்தியூர், சத்தி, கோபி உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். மரவள்ளி அறுவடை நேரத்தில் ராசிபுரம், ஆத்தூர், சேலம் ஆகிய பகுதிகளில் இயங்கும் சேகோ ஆலைகளில், ராசிபுரத்தில் 2 நாள், ஆத்தூரில் 2 நாள், சேலத்தில் 2 நாள் என தனித்தனியாக அறவை நிறுத்தப்பட்டதன் காரணமாக சுமார் 400 டன் மரவள்ளி கிழங்கு வரை தேக்கமடைந்தது.
இதனால் மரவள்ளிக் கிழங்கு விலை டன்னுக்கு ரூ. 5, 200 முதல் 5, 300 வரையில் விற்பனை விலை கிடைத்தது. இப்பிரச்னை தொடர்பாக சென்ற ஆண்டில் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த முத்தரப்புக் கூட்டத்தில் மரவள்ளிக்கு டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வரை கொள்முதல் விலை என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், முத்தரப்பு கூட்டத்தில் எடுத்த முடிவின் படி விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
இந்நிலையில், மரவள்ளிக் கிழங்கு, ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆகியவற்றின் விலை ரூ.700 வரை உயர்ந்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:
கடந்த சில வாரங்களுக்கு முன் மரவள்ளி கிழங்கு அறுவடை நேரத்தில் ஒரு டன் ரூ.5, 200 முதல் 5, 300 வரையிலும், ஸ்டார்ச் 90 கிலோ மூட்டை ரூ. 2, 250 வரையிலும், ஜவ்வரிசி 90 கிலோ மூட்டை ரூ. 3, 350 வரையிலும் விற்கப்பட்டது. மரவள்ளி கிழங்கை பொருத்தவரையில் முத்தரப்பு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி விலை கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், மரவள்ளி கிழங்கு டன் ரூ. 5, 800 முதல் ரூ.6 ஆயிரமும், ஸ்டார்ச் 90 கிலோ மூட்டை ரூ. 2, 425 , ஜவ்வரிசி 90 கிலோ மூட்டை ரூ. 4,100 -க்கும் விலை அதிகரித்துள்ளது. கிழங்கு, ஸ்டார்ச் விலை ரூ. 700 வரை உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் ஈரோடு மாவட்டத்தை தவிர, சேலம், தருமபுரி மாவட்டங்களில் மழை அளவு குறைவு என்பதால் நடப்பாண்டும் மரவள்ளி சாகுபடி அதிகம் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. இத்தகு சூழலில், மரவள்ளி கிழங்கு விலை ரூ. 6 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.