ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 217 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமை வகித்தார். இதில், முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக் கடன், தொழில் கடன், குடிநீர், சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 217 மனுக்களைப் பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்கள் துறை ரீதியான விசாரணைக்கு அனுப்பி, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் பிரபாவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ஜெயராமன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.