திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் துரைராமசாமி நகரைச் சேர்ந்தவர் செந்தில் (38). இவர் நூல் வர்த்தக டெக்ஸ்டைல்ஸ் தொழில் நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனத்தில் முத்தூர் மலையாத்தாபாளையம் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த சரவணன் (29) என்பவர் டிரைவராக வேலை செய்துவந்தார். டெக்ஸ்டைல்ஸ் அதிபர் செந்தில், டிரைவர் சரவணனைக் குழி பறிக்கவும், செடிக்குத் தண்ணீர் விடும்படியும் கூறியுள்ளார். இதைச் செய்ய அவர் மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட செந்தில், டிரைவரை பிவிசி பைப்பால் அடித்து உதைத்து, ஜாதியைச் சொல்லித் திட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்தப் புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர் விசாரணை நடத்தி, செந்தில் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து செந்தில் தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், அதே நிறுவனத்தில் பணிபுரியும் துரைராமசாமி நகரைச் சேர்ந்த அனில்குமார் மனைவி பிரியங்கா (27) என்பவர், டிரைவர் சரவணன் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில் சரவணன் தன்னிடம் கெட்ட நோக்கத்தில் பழக முயன்று தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், செல்லிடப்பேசியில் படம் எடுத்து மிரட்டுவதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் மு.ஜெயபாலன், டிரைவர் சரவணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.