சென்னிமலை அருகே சோள தட்டுப்போர் தீப்பிடித்து எரிந்து சேதமானது.
சென்னிமலை, ஊத்துக்குளி சாலை, கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பொன்னப்பன் (65), விவசாயி. இவரது தோட்டத்தில் மாடு, எருமைகளுக்குத் தேவையான தீவனத்துக்காக சோளத்தட்டுகளை அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த சோளத்தட்டில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை கரும்புகை வந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, சோளத்தட்டுப்போர் தீயில் எரிந்து கொண்டிருந்தது.
உடனே, தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், தீ மள மளவென பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து, சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.