ஈரோடு அருகே ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை தேர்தல் நிலைக் குழு கண்காணிப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை அருகே ரகுபதிநாயக்கன்பாளையம் என்ற இடத்தில், தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினர் அலுவலர் குருசாமி தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஈரோடு-பழனி சாலையில் வந்த காரை வழிமறித்து சோதனை நடத்தினர். அதில் ஆவணங்கள் இல்லாமல் ரூ.ஒரு லட்சத்து 720 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், மூலப்பாளையத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் ராஜா என்பதும் இவருக்கு, சொந்தமாக முள்ளாம்பரப்பு என்ற இடத்தில் உள்ள சித்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்துக்கு பணம் கொண்டு சென்றதாக தெரிவித்தார்.
ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் ஈரோடு கோட்டாட்சியர் முருகேசனிடம் ஒப்படைத்தனர்.